கொரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய நடைமுறைகள் அமல்


கொரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய நடைமுறைகள் அமல்
x
தினத்தந்தி 2 Aug 2021 8:24 AM GMT (Updated: 2 Aug 2021 8:24 AM GMT)

கொரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய நடைமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைந்து வந்தது. 

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கோவையில் மீண்டும் தொற்று பரவல் மெல்ல உயர தொடங்கியது. திடீரென தொற்று பாதிப்பு உயர தொடங்கியதை அடுத்து மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக இன்று முதல் கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்று முதல் கோவையில் பால், மருந்தகங்கள், தனியாக செயல்படும் காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பால், மருந்தகங்கள், காய்கறிகள் கடைகள் மட்டும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் 10 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதன்பின்னர் கடைகள் மூடப்படும். கடைகளுக்கு வருபவர்களை கடை உரிமையாளர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.

மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லரை விற்பனை நிறுத்தப்பட்டு, மொத்த விற்பனை மட்டுமே நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை வியாபாரிகள் வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர். மார்க்கெட்டுகளிலும் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அங்கு வந்த அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

கோவையில் திடீரென தொற்று அதிகரித்ததாலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாலும் இன்று முதல் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Next Story