113 குழந்தைகள் உள்பட தமிழகத்தில் 1,956 பேருக்கு கொரோனா


113 குழந்தைகள் உள்பட தமிழகத்தில் 1,956 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Aug 2021 9:27 PM GMT (Updated: 8 Aug 2021 9:27 PM GMT)

தமிழகத்தில் 113 குழந்தைகள் உள்பட 1,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 627 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,083 ஆண்கள், 873 பெண்கள் என மொத்தம் 1,956 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 241 பேரும், ஈரோட்டில் 185 பேரும், சென்னையில் 187 பேரும், செங்கல்பட்டில் 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 113 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 276 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 4 ஆயிரத்து 299 ஆண்களும், 10 லட்சத்து 70 ஆயிரத்து 971 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 75 ஆயிரத்து 308 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 562 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 71 ஆயிரத்து 72 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 24 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 4 பேரும் என 28 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சேலம், திருப்பூரில் தலா 4 பேரும், கோவையில் 3 பேரும் உள்பட 19 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 317 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1,807 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 112 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 168 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 449 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 70 ஆயிரத்து 729 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து 1,807 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 202 பேரும், சென்னையில் 157 பேரும், ஈரோட்டில் 144 பேரும் அடங்குவர். இதுவரை 25 லட்சத்து 20 ஆயிரத்து 584 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 407 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story