முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்தும் பெற்றுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் கூறப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையிலேயே இன்று கோவை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி இன்று சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்தும் பெற்றுள்ளது.
Related Tags :
Next Story