நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை பணியில் சேர்க்க மறுப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்


நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை பணியில் சேர்க்க மறுப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
x
தினத்தந்தி 11 Aug 2021 12:06 AM GMT (Updated: 11 Aug 2021 12:06 AM GMT)

நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை பணியில் சேர்க்க மறுப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முந்தைய அ.தி.மு.க. அரசால் எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரேநாளில் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களை, தி.மு.க. அரசும் பணியில் சேர்த்துக்கொள்ள மறுத்து வஞ்சித்து வருவது ஏமாற்றமளிக்கிறது. தற்காலிக தூய்மை பணியாளர்களாக இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு செய்து, பராமரித்த தூய்மை பணியாளர்கள், தங்களது பணிநியமனம் கோரி போராடி வரும் நிலையில், அதனை கண்டும் காணாதது போல கடந்து செல்வதும், அந்த போராட்டங்களை அதிகாரத்தை கொண்டு நசுக்க முனைவதுமான தி.மு.க. அரசின் தொடர் செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆகவே தூய்மை பணியாளர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மனதிற்கொண்டு, அவர்களை மீண்டும் பணியமர்த்தி உரிய ஊதியத்துடன் நிரந்தர பணியாளர்களாக மாற்றவேண்டும். தமிழ்நாடு தூய்மை பணியாளர்களின் பணி நியமனத்தை முற்றுமுழுதாக தனியார் பெருநிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story