முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறிய போலீஸ் துறைக்கு புதிய செயலி


முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறிய போலீஸ் துறைக்கு புதிய செயலி
x
தினத்தந்தி 4 Oct 2021 11:55 PM GMT (Updated: 4 Oct 2021 11:55 PM GMT)

முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் போலீஸ் துறைக்கு புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது, ஒரு தனி நபரின் புகைப்படத்தை போலீஸ் நிலையங்களில், குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வலை அமைப்பு மற்றும் முறைகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது.

5.30 லட்சம் புகைப்படங்கள் பதிவேற்றம்

இதுவரை, 5.30 லட்சம் புகைப்படங்கள் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வலை அமைப்பு மற்றும் முறைகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை போலீஸ் நிலையத்தில், இணையதள வசதியுள்ள கணினியிலும், களப்பணியின்போது முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை செல்போனிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இச்செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம்.

குற்றப்பின்னணியை தெரிந்து கொள்ளலாம்

இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு போலீஸ் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால், காவல் அலுவலர்கள் இச்செயலியின் மூலமே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அந்த நபரை பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயலியை பயன்படுத்தி, காவல் அலுவலர்கள் ரோந்துப்பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும்போது, குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்கலாம்

மேலும், சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும்போது, அவர்களின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதா? என்பதனை கண்டறிந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும். இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியானது, குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றத்தடுப்பு பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

வருங்காலங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் உள்ள ஒரு நபரின் முகத்தினை அடையாளம் கண்டறிய ஏதுவாக, முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியில், வீடியோ பகுப்பாய்வு வசதி ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்தேகத்துக்குரிய நபர்களோ, தேடப்படும் குற்றவாளிகளோ அல்லது காணாமல் போனவர்களோ பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் நடமாடினால், அவர்களை எளிதாக கண்டுபிடிக்க இயலும். மேலும், கலவரம் அல்லது பெருந்திரளாக மக்கள் கூடியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை விவரத்தினை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பிற்கு தேவையான போலீசாரை பணியமர்த்த பயன்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குனர் (மாநில குற்ற ஆவணக்காப்பகம்) வினித் தேவ் வான்கேடே மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாலைக்கு தியாகி குமரன் பெயர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரனின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு “தியாகி குமரன் சாலை சம்பத் நகர்” என்று பெயர் சூட்டி, பெயர் பலகையை காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ., ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் டாக்டர் இளங்கோவன், திருப்பூர் குமரனின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாக இயக்குனர் பி.பொன்னையா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story