பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை


பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 7 Oct 2021 11:49 PM GMT (Updated: 7 Oct 2021 11:49 PM GMT)

பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7-10-2021 அன்று (நேற்று) சென்னை தலைமைச்செயலகத்தில், பாரா ஒலிம்பிக் போட்டிகள், பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார்.

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான பாரா ஒலிம்பிக்-2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.2 கோடிக்கான காசோலை; 2020-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், விஆர்.அரவிந்த் சிதம்பரம், ஆர்.பிரக்ஞானந்தா மற்றும் ஆர்.வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் 80 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் மேற்கண்ட போட்டியின் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.92 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2021-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி மற்றும் பா.சவிதாஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சத்திற்கான காசோலைகளும் மற்றும் மேற்கண்ட போட்டியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத்நாராயணனுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ.ஷ்யாம் சுந்தருக்கு ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

கடந்த 4-3-2019 முதல் 15-3-2019 வரை கஜகஸ்தான் நாட்டின், அஸ்தானா நகரில் நடைபெற்ற பிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்காக பா.அதிபனுக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

சதுரங்க விளையாட்டு

2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ப.இனியன், 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜாசேஷாத்திரி, 2020-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வர்ஷினி மற்றும் பி.வி.நந்திதா ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

2020-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ்.ரத்தன்வேல் மற்றும் மு.பிரனேஷ், 2021-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பா.சவிதாஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகள் என மொத்தம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்தநிகழ்வின்போது, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச்செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த்மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story