மத்திய அரசின் திட்டங்கள் அமலாவதை கண்காணிக்கும் ‘திஷா கமிட்டி’ மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டது


மத்திய அரசின் திட்டங்கள் அமலாவதை கண்காணிக்கும் ‘திஷா கமிட்டி’ மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 8 Oct 2021 11:21 PM GMT (Updated: 8 Oct 2021 11:21 PM GMT)

மத்திய அரசின் திட்டங்கள், மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திஷா கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் திட்டங்கள், மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்காக மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி, முதல்-அமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும், அதன் உறுப்பினர்களாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர். நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், பி.ரவீந்திரநாத்குமார், கே.நவாஸ்கனி ஆகியோரும்;

மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும்; மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், மு.பூமிநாதன், ஜெ.எம்.எச்.அசன் மவுலானா மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் உள்ளனர்.

என்னென்ன பணிகள்?

மேலும், இக்குழுவில் பல்வேறு அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் மேலாண்மை இயக்குநர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து, திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்யும்.

அதோடு, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லது நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவை இக்குழுவின் பணியில் அடங்கும்.

முறைகேடு புகார்கள்

மேலும், வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிலப்பிரச்சனைகள் தொடர்பாக மாநில அலுவலர்களால் தேவையான காலக்கெடுவை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்தவுள்ள தடைகளை மீளாய்வு செய்தல்,

திட்டங்களை செயல்படுத்துவதில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் முறைகேடுகள், பயனாளிகளின் தவறான தேர்வு, முறைகேடாக நிதியை திசை திருப்புதல் போன்ற புகார்களைப் பின்தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தல் ஆகிய பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

பல்வேறு திட்டங்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல், மத்திய அரசுத் துறை திட்டங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணுதல் மற்றும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் கீழ் கண்காணிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை இந்த குழு மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story