‘உள்ளாட்சி தேர்தல் வெற்றி தி.மு.க.வின் 5 மாத ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று’ மு.க.ஸ்டாலின் பெருமிதம்


‘உள்ளாட்சி தேர்தல் வெற்றி தி.மு.க.வின் 5 மாத ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று’ மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 14 Oct 2021 12:01 AM GMT (Updated: 14 Oct 2021 12:01 AM GMT)

உள்ளாட்சி தேர்தல் வெற்றி தி.மு.க.வின் 5 மாத ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என்று மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சென்னை,

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்றுவரும் செய்தி கடந்த 5 மாத தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ஆகும். சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

கஜானா காலி

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கொரோனா என்ற கொடிய தொற்று பரவிய காலமாக இருந்தது. ஒருபக்கம் மருத்துவ நெருக்கடி, இன்னொரு பக்கம் பொருளாதார நெருக்கடி. இரண்டும் சூழ்ந்த இக்கட்டான காலகட்டத்தில் தி.மு.க. அரசு அமைந்தது. கொரோனாவை வென்றோம். பரவலை கட்டுப்படுத்தினோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி உதவி அளித்தோம். அனைத்து தரப்பினரின் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றி கொடுத்தோம்.

ஆட்சி பொறுப்பேற்கும்போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது ஆகும். கஜானா காலியான நிலை மட்டுமல்ல, கடனுக்கு மேல் கடன் வாங்கியதன் மூலமாக வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிலையில் ஆட்சியை வைத்துவிட்டுப் போயிருக்கிறது. கடந்த கால அ.தி.மு.க. அரசு. அதற்காக நிதி நெருக்கடியை காரணமாக காட்டி தப்பிக்கப்பார்க்கவில்லை நாங்கள்.

செல்வாக்கு அதிகரிப்பு

மிகக்கடுமையான நிதிநெருக்கடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம். நிறைவேற்றியும் வருகிறோம். நாள்தோறும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறோம். இந்த உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் வெற்றி.

நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். தி.மு.க.வுக்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்த செல்வாக்கை விட, இந்த 5 மாத காலத்தில் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது என்பதை நான் சொல்லி வந்தேன். இது ஏதோ எனது அனுமானம் அல்ல, நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு காட்டி இருக்கிறது.

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க. அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்க தூண்டுகிறது.

புதிய மொழி

5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை, 5 மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், அனைத்துக்கும் மேலாக தி.மு.க.வின் லட்சக்கணக்கான உடன்பிறப்புகள், தொண்டர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த வெற்றி உங்கள் உழைப்பால், வியர்வையால் கிடைத்ததாகும். கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே நாங்கள் என்பதை உங்களது உழைப்பால் நிரூபித்துக்காட்டி விட்டீர்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுகூட பழைய மொழிதான். இந்த படை ஒன்றே வெல்லும் படை என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்டுள்ளீர்கள்.

மக்களை காப்போம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றி வருகிறது. இனியும் நிறைவேற்றித்தரப் போகிறது. இந்த திட்டப்பணிகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது.

எத்தகைய நல்ல திட்டங்களை கோட்டையில் இருந்து உத்தரவிட்டாலும் அதனைக் குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே, அதன் பிரதிநிதிகளான நீங்கள்தான். அதனை நெஞ்சில் வைத்து நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றி கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமையட்டும் என்று கேட்டுக்கொண்டு, மக்கள் தொண்டு ஒன்றே நமது செயல்பாடுகள் என்று மக்கள் கொண்டாடும் வகையில் நமது பணிகள் அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்.மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்போம். மக்களைக் காப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story