சொந்த ஊர் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: சென்னை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை


சொந்த ஊர் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: சென்னை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2021 7:13 PM GMT (Updated: 17 Oct 2021 7:13 PM GMT)

ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 41). இவர் சென்னையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி உஷா. இவர் சங்கரன்கோவிலில் உள்ள கல்லூரியில் சமையலராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

பிணமாக கிடந்தார்

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளங்கோவன் மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த பலபத்திரராமபுரம் குளத்தின் கரையில் இளங்கோவன் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெட்டிக்கொலை

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இளங்கோவன் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இளங்கோவனை கொலை செய்த கொலையாளிகள் யார்? அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் தந்தை செல்லத்துரை, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story