தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 12 Nov 2021 11:24 PM GMT (Updated: 12 Nov 2021 11:24 PM GMT)

அந்தமானில் இன்று (சனிக்கிழமை) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள் ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது.

அதன் தொடர்ச்சியாக அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழை யும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

19 மாவட்டங்களில் இன்று கனமழை

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுச்சேரி, கடலூர் மற்றும் ஏனைய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அனேக இடங்களில்...

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

மழை அளவு

சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 4 இடங்களில் மிக கனமழையும், 24 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக சுருளக்கோடு 15 செ.மீ., கன்னிமார், ஏற்காடு தலா 14 செ.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை தலா 13 செ.மீ., திருத்தணி 12 செ.மீ., வாலாஜா, பள்ளிப்பட்டு, பூதப்பாண்டி தலா 11 செ.மீ., மயிலாடி, சோழவரம், கலசப்பாக்கம் தலா 10 செ.மீ., கும்மிடிப்பூண்டி 9 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், ஊத்துக்கோட்டை, வெம்பாக்கம், ஜமுனாமரத்தூர் தலா 8 செ.மீ., எம்.ஜி.ஆர். நகர், அயனாவரம், சென்னை கலெக்டர் அலுவலகம், ஏற்காடு, காஞ்சீபுரம், கலவை, கொட்டாரம், செங்குன்றம், சோளிங்கர், நாகர்கோவில், அரக்கோணம், பொன்னேரி, காட்பாடி தலா 7 செ.மீ., எம்.ஆர்.சி. நகர், பேச்சிப்பாறை, திருவலங்காடு, ஸ்ரீபெரும்புதூர், தரமணி, திருக்கழுக்குன்றம், சென்னை நுங்கம்பாக்கம், தர்மபுரி, ஆலந்தூர், ஆம்பூர், செங்கம், திருவண்ணாமலை தலா 6 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

Next Story