புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்


புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்
x
தினத்தந்தி 3 Dec 2021 7:50 PM GMT (Updated: 3 Dec 2021 7:50 PM GMT)

புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பள்ளிப் படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் தான் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்வழி கல்விக்கான 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையிலான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2020 மார்ச் 16-ந் தேதி நிறைவேற்றப்பட்டு, சுமார் 9 மாத காலத்திற்கு பிறகு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டது.

புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அறிவிக்கப்பட்ட 18 சப்-கலெக்டர், 19 ஏ.டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 69 குரூப்-1 பணிக்கானத் தேர்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, சில மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டின் மதுரை கிளை தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து டி.என்.பி.எஸ்.சி தொடர்ந்த மேல்முறையீடும் கடந்த ஜூலை மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், அந்த குரூப்-1 தேர்வில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்து 2 மாதங்கள் நிறைவடைந்தும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அது குரூப்-1 பணிக்காக காத்திருக்கும் தேர்வர்களிடம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இனியும் தாமதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 பணிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிட்டு, முதன்மைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை டி.என்.பி.எஸ்.சி. மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story