அன்றாட தேவைக்கான காய்கறிகளை வீடுகளில் விளைவிக்க: ஊரக, நகர்ப்பகுதிகளில் காய்கறி தோட்ட திட்டம்


அன்றாட தேவைக்கான காய்கறிகளை வீடுகளில் விளைவிக்க: ஊரக, நகர்ப்பகுதிகளில் காய்கறி தோட்ட திட்டம்
x

அன்றாட தேவைக்கான காய்கறிகளை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விளைவிக்கும் வகையில் ஊரக, நகர்ப்பகுதிகளில் காய்கறி தோட்ட திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

வேளாண்மை பட்ஜெட்டின் போது முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 75 லட்சம் செலவில் நகர்ப்பகுதிகளில் 900 ரூபாய் மதிப்புடைய 6 வகையான காய்கறி விதைகள், 6 எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், 6 எண்ணிக்கையிலான 2 கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மில்லி லிட்டர் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தளைகள் 225 ரூபாய் என்ற மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 2 மாடித்தோட்ட தளைகள் வரை வழங்கப்படும்.

ஊட்டச்சத்து தளைகள்

ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக ரூ.90 லட்சம் செலவில் 15 ரூபாய்க்கு கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல் பூசணி, கீரைகள் ஆகிய 12 வகை காய்கறி விதைத்தளைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த காய்கறி விதைத்தளையினை 2 தொகுப்புகள் வரை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து பயன்பெற, ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில், 25 ரூபாய்க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா மற்றும் சோற்றுகற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஊட்டச்சத்து தளைகள் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும்.

இணையதளம் மூலம் பெறலாம்

இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மாடித்தோட்ட, காய்கறி தோட்ட தளைகள் மற்றும் ஊட்டச்சத்து தளைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்து சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மூலிகைகள் உட்கொள்ளும் வாய்ப்பினையும், ஊக்கம் தரும் பொழுதுபோக்கினையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

விழிப்புணர்வு வாகனம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக முதல்-அமைச்சர் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றில் ஒன்றாக, தமிழ்நாடு காவல் துறை அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான, ஒளி, ஒலி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு 2 வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story