மின்நுகர்வோர் குறைகளை தீர்க்கும் ‘மின்னகம்’ ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்ததா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி


மின்நுகர்வோர் குறைகளை தீர்க்கும் ‘மின்னகம்’ ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்ததா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
x
தினத்தந்தி 8 Dec 2021 11:10 PM GMT (Updated: 8 Dec 2021 11:10 PM GMT)

மின்நுகர்வோர் குறைகளை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘மின்னகம்’ ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்ததா? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

மின் நுகர்வோர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று அவற்றை உடனுக்குடன் களையும் வகையில், ஜெயலலிதா ஆட்சியில் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையம் செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் தி.மு.க. அரசு தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ‘மின்னகம்’ என்ற ஒரு தனி தளத்தை அமைத்துள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த 1912 என்கிற மின்தடை புகார் எண்ணில் தமிழ்நாட்டில் உள்ள 44 மின்தடை புகார் மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 12 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது. அதனை முற்றிலும் மறைத்து, தற்போது தி.மு.க. ஆட்சியில்தான், மின்தடை புகார் மையங்கள் ‘மின்னகம்’ வாயிலாக உருவாக்கப்பட்டது போலவும், இதன் காரணமாக நாளொன்றுக்கு 8 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்படுவது போலவும் சுய விளம்பரத்தை தி.மு.க. செய்து கொண்டிருக்கிறது.

மின் ஊழியர்கள் அதிருப்தி

‘மின்னகம்’ என்ற போர்வையில் 3 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோரது தரவுகள் அனைத்தும் ஊர், பெயர் தெரியாத தி.மு.க.வைச் சேர்ந்த ஓர் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனவே முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, ‘மின்னகம்' ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்ததா? என்பது குறித்தும், அது குறித்த விவரங்களை வெளிப்படையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக இணையத்தில் வெளியிடவும், ஏற்கனவே பணிபுரிந்து வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கவும், ‘மின்னகம்’ தொடர்பாக மின்சார ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடையே நிலவும் அதிருப்தியை களையவும், 3 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்களின் தரவுகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story