சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 April 2022 9:46 PM GMT (Updated: 20 April 2022 9:46 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 180 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை அதிகாரிகள் கண்காணித்தபோது, சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அபூபக்கர் (வயது 32), சிவகங்கையை சேர்ந்த முகமது மில்கான் (35) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

1 கிலோ தங்கம்

அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.57 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 180 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அபூபக்கர், முகமது மில்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story