‘நீட்’ விலக்கு சட்ட மசோதா: ஜனாதிபதி ஒப்புதலை விரைவில் பெற வேண்டும்


‘நீட்’ விலக்கு சட்ட மசோதா: ஜனாதிபதி ஒப்புதலை விரைவில் பெற வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2022 10:10 PM GMT (Updated: 5 May 2022 10:10 PM GMT)

‘நீட்’ விலக்கு சட்ட மசோதா: ஜனாதிபதி ஒப்புதலை விரைவில் பெற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவை 86 நாட்கள் ஆய்வுக்குப் பின் மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். இதை எண்ணி ஆறுதல் பட முடிகிறதே தவிர, மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்கு காரணம் நாம் இன்னும் முழு கிணற்றை தாண்டவில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான மாநில அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் தமிழக கவர்னர் மாளிகை நடந்து கொண்ட முறையை சுப்ரீம்கோர்ட்டு கடந்த வாரம் கடுமையாக விமர்சித்திருந்தது.

‘நீட்’ விலக்கு சட்டத்திலும் கூட அதே போன்ற விமர்சனத்தை எதிர்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் காரணமாகக் கூட ‘நீட்’ விலக்கு சட்ட முன்வரைவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்திருக்கலாம். எப்படியாக இருந்தாலும் இது தகுதிச் சுற்றில் பெற்ற வெற்றியைப் போன்றது தான்.

எனவே சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகள், அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளிட்ட அனைத்தையும் பெற்று நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு விரைவாக ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story