தேனி: கோவிலில் சாமி சிலைகள் திருடிய வாலிபர் கைது - கூட்டாளிக்கு போலீஸ் வலைவீச்சு


தேனி: கோவிலில் சாமி சிலைகள் திருடிய வாலிபர் கைது - கூட்டாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 May 2022 11:55 AM GMT (Updated: 7 May 2022 11:55 AM GMT)

தேனி அருகே கோவிலில் பூசாரியை தாக்கி சாமி சிலை மற்றும் உண்டியலை திருடி சென்ற வாலிபரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் பிடித்து சிறையில் அடைத்தனர்.

தேனி:

தேனி மாவட்டம்,  அன்னஞ்சியில் போலீஸ் நிலையம் அருகே ஆதிநாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் கடந்த 30-ந்தேதி முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் பட்டாக்கத்தியுடன் புகுந்தனர். 

அங்கிருந்த பூசாரி ராஜாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த சாவியை பிடுங்கி கோவிலை திறந்தனர். சத்தம் கேட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்திருந்த பத்மநாபன் என்பவர் அங்கு வந்தார். அவரையும் அந்த நபர்கள் தாக்கினர். 

பின்னர் கோவிலில் இருந்த சுமார் ஒரு அடி உயரம் கொண்ட 2 வெண்கல நாடராஜர் சிலைகள் மற்றும் அங்கிருந்த உண்டியலை கொள்ளையடித்துவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். கோவில் செல்லும் வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபரில் ஒருவரின் முகம் அடையாளம் தெரிந்தது. 

அவர், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் சரவணக்குமார் என்ற நவீன் (வயது 22) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சிலைகளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த அருண் என்பவருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், கோவிலில் கொள்ளையடித்த உண்டியல் அவரிடம் தான் உள்ளது என்றும் தெரியவந்தது. 

இதையடுத்து அந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருணை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணக்குமார் என்ற நவீன் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார்.

Next Story