மெகா சிறப்பு முகாம்: தமிழகத்தில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


மெகா சிறப்பு முகாம்: தமிழகத்தில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 8 May 2022 11:15 PM GMT (Updated: 8 May 2022 11:15 PM GMT)

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நேற்று மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் 29-வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தது.

இந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தகுதியானவர்களை கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நினைவூட்டல் சீட்டு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சீட்டில் தடுப்பூசி போட தகுதியானவர்கள் தங்கள் அருகில் உள்ள முகாம்கள் குறித்த தகவல் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் பெரும் அளவில் தகுதியானவர்கள் நேற்று தடுப்பூசி போட்டனர்.

மக்களை தேடி சென்று...

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள், போலீசார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினர், மக்களை தேடி மருத்துவம் குழுவினர் மற்றும் தெற்கு ரெயில்வே சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு, பயனாளிகளை தேடி சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் நேற்று 3 ஆயிரத்து 300 முகாம்கள் நடத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது. அந்தவகையில் 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டுக்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள், 3,100 இடங்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தினர்.

17.70 லட்சம் பேருக்கு...

அந்தவகையில் நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 60,042 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 23,574 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 9,16,449 பேருக்கும், 45 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 4,49,978 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,94,264 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 10 கோடியே 74 லட்சத்து 6 ஆயிரத்து 867 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்களில் மட்டும் 4.12 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேயர் பிரியா ஆய்வு

சென்னை கோடம்பாக்கம் சிவன் பூங்காவில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் வீடுகளில் இருந்து பெறப்பட்ட காய்கறி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

Next Story