திருத்தணி கோட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் சாராயம், மது விற்ற 26 பேர் கைது


திருத்தணி கோட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் சாராயம், மது விற்ற 26 பேர் கைது
x

திருத்தணி கோட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சாராயம், மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் இறந்தனர். மேலும் சிலர் கடும் பாதிப்புகள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள சாராய வியாபாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தொடங்கியது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம், திருவலாங்காடு, திருத்தணி, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய 6 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான போலீசார் சாராய வியாபாரிகள் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பவர்களை வலைவீசி தேடினர்.

இந்த தேடுதல் வேட்டையில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 26 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்தணி போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள், திருவலாங்காடு-கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் 5, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய மூன்று போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சாராய வழக்கு 4, மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து திருத்தணி கோட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story