விருதுநகரில் 26-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி கூட்டம்


விருதுநகரில் 26-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி கூட்டம்
x

விருதுநகரில் 26-ந் தேதி நடக்கும் தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

விருதுநகர்

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 25-ந் தேதி மாலை விருதுநகர் வருகிறார்.

26-ந் தேதி மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குகிறார். ராமமூர்த்தி ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தலில் நடைபெறும் இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து விருதுநகர் கல்லூரி சாலையில் விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க.வை சேர்ந்த 2,000 தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். இதனை தொடர்ந்து மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் கூட்ட அரங்கில் பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இதில் கலெக்டர் ஜெயசீலன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மாவட்ட எல்லையில் இருந்து ஆர்.ஆர்.நகர் வரை அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story