மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை


மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை
x

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

மதுரை,

உற்பத்தி செலவு அதிகரிப்பால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று ஆவின் தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரை மண்டல ஆவின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை ஆவின் கடந்த நிதியாண்டில் நாள் ஒன்றுக்கு சராசரி யாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 780 லிட்டர் பால் கொள்முதல் செய்து உள்ளது. அதில் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பாலாக விற்பனை செய்து உள்ளது. மீதம் உள்ளவற்றை பால் உப பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து உள்ளது. அதன்மூலம் ஈட்டப்பட்டு உள்ள ரூ.13 கோடியே 71 லட்சம் லாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

மதுரை ஆவினில் 716 கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்களில் மொத்தம் 38 ஆயிரத்து 82 உறுப்பினர்கள் உள்ளனர். கால்நடைத்தீவன செலவு உள்ளிட்ட பால் உற்பத்தி செலவு அதிகரிப்பால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கிய மொத்த பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 50 பைசா வீதம் மொத்தம் ரூ.3.75 கோடி வழங்க உத்தரவு பெறப்பட்டு, தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 18,050 பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story