ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக 3 பேர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்


ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக 3 பேர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்
x

ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் 3 வகை பிரிவிலான ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் 3 மாத காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு, உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53-ஆகவும், இதர பிரிவினருக்கு 58-ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வருதல் சார்ந்த அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான காப்பீட்டு தொகையை அரசே செலுத்தும். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story