ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை - தேனியில் சோகம்


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை - தேனியில் சோகம்
x
தினத்தந்தி 29 March 2024 10:48 AM GMT (Updated: 29 March 2024 11:00 AM GMT)

தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செவ்வந்தி (வயது 60). இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30), தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை வாங்கி அதனை மாத தவணையாக கட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. நேற்று வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு ஒச்சம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பார்த்ததால் அவர் மிகுந்த வேதனையடைந்தார். இரவு வீட்டுக்கு வந்த தனது கணவர் மற்றும் மகனிடம் இது குறித்து கூறி ஒச்சம்மாள் கதறிஅழுதார். பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானமாக பேசியதால் இனிமேல் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து 3 பேரும் விஷத்தை குடித்துள்ளனர்.

இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story