ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் 340 பேர் கைது


ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் 340 பேர் கைது
x

ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கஞ்சா வழக்குகளில் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனரகம் தெரிவித்துள்ளது. ஆவடி போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவள்ளூர்

ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட குற்ற வழக்குகளை கண்காணித்து வரப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 213 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 736 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 340 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 21 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

போதை ஒழிப்பு நடவடிக்கையாக இதுவரை 472 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் கழுகு கண் கொண்டு கண்காணிப்பதற்காக ஈகிள் போலீஸ் ஆபீசர் நியமிக்கப்பட்டு கஞ்சா கடத்துதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்பவர்களை கண்காணித்து வருகிறார். மேற்கண்ட குற்றங்கள் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வசதியாக 9345455400 என்ற செல்போன் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எந்த நேரமும் மேற்கண்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கூறுபவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story