படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது


படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது
x

படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர்கள் இருவரும் மணிமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே நேற்று முன்தினம் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தரை சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

வெட்டு காயங்களுடன் கிடந்த இருவரையும் மணிமங்கலம் போலீசார் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக மணிமங்கலம போலீஸ் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி்ச் சென்ற கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக மணிமங்கலம் பெரிய காலனி பகுதியை தெருவீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் (22), மணிமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (19), மேற்கு மாடவீதியை சேர்ந்த லோகேஸ்வரன் (19), இந்திராநகர் பகுதியை சேர்ந்த டில்லிபாபு(21) ஆகியோரை வரதராஜபுரம் அருகே போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிமங்கலம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த மார்ச் மாதம் தேவேந்திரன் ( 23) என்பவர் மணிமங்கலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நண்பர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே இருவரையும் வெட்டி படுகொலை செய்தோம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர். இவர்களிடம் இருந்து கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story