சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் சிக்கியது
x

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது கொழும்பு மற்றும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது அதில் ரூ.18 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்தது தெரிந்தது.

மேலும் 4 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது அவர்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 4 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 150 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 4 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடியே 45 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story