சிதம்பரம் அருகே கோர விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி


x

சிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர்.

மயிலாடுதுறை:

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 38). இவர் அப்பகுதியில் டைல்ஸ் கடை வைத்திருக்கிறார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானத்தில் தனது உறவினர் வீடு கட்டுவதற்காக டைல்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை ஒரு மினி லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இந்த வாகனத்தை சேலத்தைச் சேர்ந்த டிரைவர் நகுலேஸ்வரன் (25) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த மினி லாரியில் செல்வக்குமார், அவரது மனைவியின் தங்கை கற்பகவள்ளி (27), செல்வகுமாரின் மகன் மிதுன் (3) ஆகியோர் வாகனத்தின் முன்புறம் உட்கார்ந்து இருந்தனர். வாகனத்தின் பின்புறம் சிவக்குமார் (34), கருப்புசாமி (34), பெருமாள் (42) ஆகிய 3 பேரும் அமர்ந்து பயணித்துள்ளனர்.

இந்த மினி லாரி இன்று அதிகாலை சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள கூத்தன்கோவில் அருகே வந்தபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினிலாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செல்வக்குமார் அவரது உறவினர் கற்பகவள்ளி, மகன் மிதுன் மற்றும் டெம்போ டிரைவர் நகுலேஸ்வரன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவக்குமார், கருப்புசாமி, பெருமாள் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story