மேடவாக்கத்தில் காதலுக்கு இடையூறு செய்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - காதலன் உள்பட 4 பேர் கைது


மேடவாக்கத்தில் காதலுக்கு இடையூறு செய்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - காதலன் உள்பட 4 பேர் கைது
x

மேடவாக்கத்தில் காதலுக்கு இடையூறு செய்த வாலிபரை அரிவாளால் வெட்டிய காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த மேடவாக்கம் புதுநகர் ராஜேந்திர பிரசாத் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் விஜய் (வயது 23). இவருடைய தங்கையை பெரும்பாக்கம் இந்திரா நகர் எத்திராஜ் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (26) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ராஜேஷ் மீது குற்ற வழக்குகள் உள்ளதும், பெரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரியவந்தது. இந்த விவரங்களை ஆதாரங்களுடன் தனது தங்கையிடம் மைக்கேல் விஜய் தெரிவித்தார். இதனால் அவரது தங்கை, ராஜேசுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

தனது காதலுக்கு இடையூறு செய்த மைக்கேல் விஜய் மீது ஆத்திரம் அடைந்த ராஜேஷ், அவரை பழிவாங்க திட்டம் தீட்டி வந்தார்.

அதன்படி கடந்த 6-ந் தேதி மேடவாக்கம் கூட்ரோடு அருகே நின்றிருந்த மைக்கேல் விஜயை, தனது நண்பர்களுடன் வந்த ராஜேஷ் அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மைக்கேல் விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்பின் ராஜ் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ், அவருடைய நண்பர்களான திருமுடிவாக்கம் எருமையூரைச் சேர்ந்த பாரத் (24), விக்னேஷ் (21), பெரும்பாக்கம், நேசமணி நகரை சேர்ந்த ஆகாஷ் (23) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story