இலங்கை தமிழர்கள் 4 பேர் தமிழகம் வருகை..!


இலங்கை தமிழர்கள் 4 பேர் தமிழகம் வருகை..!
x

இலங்கை தமிழர்கள் 4 பேர் ராமேசுவரம் வந்துள்ளனர்.

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால் அங்கு வாழ வழியின்றி இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதி கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 36), அவரது மனைவி மேரி (34), மகள்கள் கிருத்திகா (7) மற்றும் கிருஷ்மா (4) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் மன்னார்வளைகுடா பகுதியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.

இதுவரை இலங்கையில் இருந்து 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story