உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் - அன்புமணி ராமதாஸ்


உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் - அன்புமணி ராமதாஸ்
x

உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கவேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது.

தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்து விட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவு பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், பிற அத்தியாவசிய தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய-மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகள் மத்திய-மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story