மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2016- ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் சந்திரசேகரன். இவர் பள்ளியில் படித்த சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிவில் சந்திரசேகரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத்பக்ரதுல்லா இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.






