கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

நாட்டுக்கோழி பண்ணை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கால்நடை பராமரிப்புத்துறை 2023-24-ம் ஆண்டில் மானிய கோரிக்கை அறிவிப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்காணும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக திட்டம் செயல்படுத்தப்படாத மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

50 சதவீத மானியம்

நாட்டுக்கோழி பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச்செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) போன்றவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625) மாநில அரசால் வழங்கப்படும்.திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

625 சதுர அடி நிலம்

பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2022-23-ம் ஆண்டுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயனடைந்திருக்க கூடாது.

கட்டுமானப்பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர்/ பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

முன்னுரிமை அடிப்படையில்

விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 ஆண்டுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022 -23-ம் ஆண்டுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.

மாவட்டங்களில் இருந்து பெறப்படும் மாவட்ட கலெக்டர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலில் இருந்து, முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநரால் இறுதி செய்யப்படும். மேற்படி பொருள் குறித்து பொதுமக்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story