வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை


வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
x

பொள்ளாச்சியில் வியாபாரி வீட்டில் 50 நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வியாபாரி வீட்டில் 50 நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை கொள்ளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் டி காலனியை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 73). மர வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.

இதற்கிடையில் அவரது மகள் காயத்ரி வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே குருவாயூர் சென்றிருந்த தனது தந்தை தங்கவேலுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து குடும்பத்துடன் விரைந்து வந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 50 பவுன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தங்கவேல் குருவாயூருக்கு சென்று இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தனிப்படை அமைத்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story