சீனாவில் இறந்து 51 நாட்களுக்கு பிறகு குமரி மருத்துவ மாணவி உடல் சொந்த ஊருக்கு வந்தது..


சீனாவில் இறந்து 51 நாட்களுக்கு பிறகு குமரி மருத்துவ மாணவி உடல் சொந்த ஊருக்கு வந்தது..
x

குமரி மருத்துவ மாணவி, உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் இடைக்கோடு புல்லந்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 55), ஜவுளி வியாபாரி. இவருடைய ஒரே மகள் ரோகிணி (27). இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்தார். இந்த மாதம் அவரது மருத்துவ படிப்பை நிறைவு செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப தயாராக இருந்தார். பெற்றோரும் மகளின் வருகைக்காக காத்திருந்தனர்.

இந்தநிலையில் ரோகிணி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கோபால கிருஷ்ணனுக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதாவது, ரோகிணி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு ரத்த அணுக்கள் குறைந்து, உடலில் மருந்து ஏறவில்லை என கூறப்படுகிறது. இறுதியில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர், தமிழக அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ரோகிணி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டன. ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டது.

மாணவியை சீனாவுக்கு அழைத்து சென்ற ஏஜென்சி, தற்போது அவரது உடலை கொண்டு வர பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளது. மகளின் படிப்பிற்கு அதிக செலவு செய்து விட்டதால் மீண்டும் பல லட்சம் ரூபாய் செலவிட முடியாத சூழலில் மாணவியின் பெற்றோர் தவித்து வந்தனர். இப்படியாக நாட்கள் மட்டுமே உருண்டோடின.

இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தீவிர முயற்சி மேற்கொண்டதில் மாணவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக ரோகிணி இறந்து 51 நாட்களுக்கு பிறகு நேற்று காலை சீனாவில் இருந்து விமானம் மூலம் அவரது உடலை சென்னை கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவியின் உடல் சொந்த ஊரான இடைக்கோடுக்கு நேற்று இரவு வந்தடைந்தது.


Next Story