மோட்டார் சைக்கிள் விபத்தில் 7 மாத குழந்தை சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் 7 மாத குழந்தை சாவு
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 7 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி முத்தமிழ் (26). இவரது மகன் ஜோசன்(3). மகள் லூவி டெரினா (7 மாதம்). கடந்த மாதம் 27-ந்தேதியன்று தன்னுடைய மனைவி முத்தமிழ் மகன் ஜோசன், 7 மாத கைக்குழந்தை லூவி டெரினாவுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் கே.ஜி. கண்டிகை மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர்.

தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

முத்தமிழ் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா கீழே வீழ்ந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பேரம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை லூவி டெரினா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனது. இது குறித்து முத்தமிழ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story