7 ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த இலங்கை கடற்படை


7 ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:45 PM GMT)

ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. அவர்களது படகையும் பறிமுதல் செய்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. அவர்களது படகையும் பறிமுதல் செய்தது.

7 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர் அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். மேலும் ராமேசுவரத்தைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த கிளிண்டன் (வயது 31), பேதுரு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, இன்ஸ்ட் ஆகிய 7 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் 7 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் இலங்கையில் காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் 7 மீனவர்களும் ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 7 மீனவர்களையும் வருகிற 9-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மீனவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் விசைப்படகுடன் ராமேசுவரத்தைச் சேர்ந்த 7 மீணவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள 7 பேரையும் விடுவித்து சொந்த ஊர் அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story