காவலாளிக்கு 7 ஆண்டு ஜெயில்


காவலாளிக்கு 7 ஆண்டு ஜெயில்
x

சென்னை போரூரில் காவலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் சக காவலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து காஞ்சீபுரம் மாவட்ட விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சென்னை

சென்னை போரூர் ஆர்.ஏ.நகர் பகுதியை சேர்ந்தவர் சுராஜ்குமார் (வயது 35). இவர் சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுநல்லூர் கிராமத்தில் உள்ள ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் செந்தூர்பாண்டி (56). இவர்கள் இருவருக்கும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

இதில் செந்தூர்பாண்டி சுராஜை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சீபுரம் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் சத்தியமூர்த்தி ஆஜரானார். வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன் செந்தூர்பாண்டிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story