7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீர் ராஜினாமா


தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர், இது எனக்கான களம் அல்ல, என்றார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர், இது எனக்கான களம் அல்ல, என்றார்.

ராஜினாமா கடிதம்

பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரான கண்ணுச்சாமி என்பவரது மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் நேற்று அவர் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் அவர், சொந்த காரணங்களுக்காக என்னால் இப்பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், நான் வகிக்கும் நகரமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கி கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் நர்மதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

எனக்கான களம் அல்ல

கடந்த 10 மாதங்களாக நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த நான், எனது சொந்த காரணங்களுக்காக இந்த பதவியில் இருந்து விலக கடிதத்தை அளித்து உள்ளேன். வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியில் பணியாற்ற வாய்ப்பு அளித்த மக்களுக்கும், அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். படித்து கொண்டிருந்த போது மக்களுக்காக பணியாற்ற எனக்கு நகராட்சி கவுன்சிலர் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் வந்தேன். பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நான், மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வதற்கு வேறு சிறந்த களம் அமையும் என்றும், இது எனக்கான களம் அல்ல என்றும் உணர்ந்து விலகி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எண்ணிக்கை குறைந்தது

ராஜினாமா செய்த நர்மதா குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். மேலும் குரூப்-1 தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவிற்கு காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. தி.மு.க. 30 இடங்கள், அ.தி.மு.க. 3 இடங்கள், ம.தி.மு.க ஒரு இடம், சுயேட்சை 2 இடங்களை பிடித்தன. தற்போது தி.மு.க. கவுன்சிலர் நர்மதா திடீரென ராஜினாமா செய்ததால் தி.மு.க. கவுன்சிலர்களின் எண்ணிக்கை 29 ஆக குறைந்துள்ளது.

1 More update

Related Tags :
Next Story