ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி


ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 13 Sep 2023 7:30 PM GMT (Updated: 13 Sep 2023 7:30 PM GMT)

சேலத்தில் வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலத்தில் வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.8½ லட்சம் மோசடி

சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த 30 வயது வாலிபரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் குறுந்தகவல் அனுப்பினார். அதில், அனுப்பப்பட்டிருக்கும் லிங்கை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி டாஸ்கை முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது.

இதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் லிங்கை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அவர் மர்ம நபர் தெரிவித்திருந்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.8 லட்சத்து 57 ஆயிரம் செலுத்தினார். அதன் பிறகு பணம் ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணை

அதன்பேரில் இந்த மோசடி தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில், வாலிபர் அனுப்பிய பணம் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று ஆன்லைனில் வரும் போலியான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story