ஆள்மாறாட்டம் செய்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி - பெண் உள்பட 3 பேர் கைது


ஆள்மாறாட்டம் செய்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி - பெண் உள்பட 3 பேர் கைது
x

ஆள்மாறாட்டம் செய்து ரூ.80 லட்சம் நிலத்தை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு புதிய காலனியை சேர்ந்தவர் விஜயராணி (வயது 33). இவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது தாயார் சரோஜா பெயரில் ஆவடி அடுத்த வெள்ளனூர் ஆர்ச் அந்தோணியார் நகரில் 2,400 சதுரஅடி கொண்ட நிலம் இருந்தது. அதை 2 பாகமாக பிரித்து எனது அக்காள் அமுலுவின் கணவர் ராமமூர்த்தி பெயரில் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அப்போது எனக்கு 15 வயதாக இருந்ததால் எனது தாயார் சரோஜாவை கார்டியனாக போட்டு மீதி நிலம் எனது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் எனது அக்காள் கணவர் ராமமூர்த்தி, விஜயலட்சுமி என்பவர் மூலம் ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து எனது நிலத்தை அமுலுவின் பெயரில் தான செட்டில்மெண்ட் செய்து கொண்டார். பின்னர் அந்த நிலத்தை எனது அக்காளின் மூத்த மகன் மனோஜ் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நிலமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மதுரவாயல் ஏரிக்கரை, கங்கையம்மன் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (56), அவருடைய மகன் மனோஜ் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கீழ்நகர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் ஆகும்.


Next Story