புழலில் வக்கீல் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை


புழலில் வக்கீல் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
x

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் ரங்கா அவென்யூ 3-வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 38). இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா.

பார்த்திபன், கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம் செய்யூருக்கு சென்றுவிட்டார். நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் வைத்து இருந்த 80 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து புழல் போலீசில் பார்த்திபன் புகார் செய்தார். அதன்பேரில் கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம், புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிய நாய், நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்ைல. கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story