ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு


ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:47 PM GMT)

மார்த்தாண்டம் அருகே ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி வயக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 35). இவருடைய மனைவி மகேஸ்வரி (28), பி.எட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தற்போது மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார்.

இந்தநிலையில் மகேஸ்வரி நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடத்தில் பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது குழித்துறை ரெயில்வே நிலையத்தை அடுத்த நெடுவாளலி குளக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டவாறு ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம ஆசாமிகள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதையடுத்து காயமடைந்த மகேஸ்வரி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மகேஸ்வரி மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story