சாலையில் உலா வந்த கரடி


சாலையில் உலா வந்த கரடி
x
தினத்தந்தி 21 Oct 2023 9:30 PM GMT (Updated: 21 Oct 2023 9:30 PM GMT)

கோத்தகிரி கடைவீதி சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி கடைவீதி சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கரடி உலா

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

கோத்தகிரி கடைவீதி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு கரடி தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் சாலையில் போலீஸ் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி முன்பு கரடி நடந்து சென்றது. பின்னர் பள்ளிவாசல், மாரியம்மன் கோவில் மற்றும் குடியிருப்புகள் வழியாக சென்று புதர் மறைவில் சென்றது.

பிடிக்க வேண்டும்

சாலையில் கரடி உலா வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அவர்கள் தங்களது வீட்டிற்குள் ஓடி சென்று ஜன்னல் வழியாக கரடியை செல்போனில் புகைப்படம் பிடித்தனர். மேலும் கடந்த 9-ந் தேதி கரடி அந்த வழியாக நடந்து சென்றவரை துரத்தியது. கடந்த ஒரு மாதமாக இதே பகுதியில் கரடி உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கரடி நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்பவர்கள், மாலை மற்றும் இரவு நேரத்தில் பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் மாணவர்கள், பணிக்கு சென்று திரும்பும் தொழிலாளர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story