புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு


புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Dec 2023 1:29 AM GMT (Updated: 16 Dec 2023 1:32 AM GMT)

சென்னையில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை, கண்ணகி நகரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரது மகனான 16 வயது சிறுவன் ஜாக் என்பவர், பரங்கிமலை அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். புறா வளர்ப்பின் மீது ஆர்வம் கொண்ட சிறுவன் ஜாக், தன் வீட்டின் மொட்டை மாடியில் ஏராளமான புறாக்களை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று புறாக்களுடன் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஜாக், புறாக்களை பிடிக்க முயன்று எதிர்பாராத விதமாக 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கிறார்.

இதை கண்டு பேரதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story