ஈரோடு ரெயில் நிலையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - பதற்றமான மக்கள்


ஈரோடு ரெயில் நிலையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - பதற்றமான மக்கள்
x

ஈரோடு ரெயில் நிலையம் அருகே கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு தனது குடும்பத்தினரை இன்று ரெயில் ஏற்றிவிடுவதற்காக, ஈரோடு ரெயில் நிலையத்திற்கு தனது காரில் அழைத்து வந்துள்ளார்.

குடும்பத்தினரை ரெயில் ஏற்றிவிட்டு, பின்னர் கார் பார்க்கிங்கில் இருந்த தனது காரை இயக்கியுள்ளார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து தீயுடன் புகை வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளார். பின்னர் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில், காரின் முன்பகுதியில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story