பூந்தமல்லி அருகே சாலை தடுப்பு சுவர் மீது சரக்கு லாரி மோதி விபத்து


பூந்தமல்லி அருகே சாலை தடுப்பு சுவர் மீது சரக்கு லாரி மோதி விபத்து
x

பூந்தமல்லி அருகே சர்க்கரை லோடு ஏற்றி வந்த லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர்

சங்ககிரியில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று காலை பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைந்து கொண்டு சில மீட்டர் தூரம் வரை சென்று நின்றது. இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்து லாரி தடுப்பு சுவரின் மீது ஏறி சாயந்த நிலையில் நின்றது.

இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. மேலும் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. போலீசார் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story