கொடைக்கானல் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர்; மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார்


கொடைக்கானல் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர்; மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 21 Oct 2023 10:30 PM GMT (Updated: 21 Oct 2023 10:30 PM GMT)

கொடைக்கானல் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்தார். மரக்கிளையை பிடித்து அவர் உயிர் தப்பினார்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 20 பேர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். வட்டக்கானல் வரை வேனில் வந்த அவர்கள், அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலைப்பாதை வழியாக நடந்து சுமார் 6 ஆயிரம் அடி பள்ளத்தாக்கு கொண்ட 'டால்பின் நோஸ்' பாறையை சென்றடைந்தனர். அங்கு எழில் கொஞ்சும் இயற்கை அழகை பார்த்து ரசித்தனர்.

தவறி விழுந்த மாணவர்

அப்போது, மாணவர்களில் ஒருவரான பிரதாப் (வயது 19) என்பவர் 'டால்பின் நோஸ்' பாறையின் நுனி பகுதியில் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் யாரும் எதிர்பாராத வகையில் பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். பள்ளத்தாக்கில் உருண்டு கொண்டே சென்ற அவர், அங்கிருந்த ஒரு மரக்கிளை இடையே மாட்டிக்கொண்டார். மரக்கிளையை பிடித்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவர் அபயகுரல் எழுப்பினார். இதனைக்கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். செய்வதறியாது திகைத்தனர்.

வனத்துறை, போலீசார், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்று கருதினர். இதனால் தாங்களே பள்ளத்தில் இறங்கி, தனது நண்பரை மீட்கும் பணியில் ஈடுபட முடிவு செய்தனர்.

100 அடி பள்ளத்தில்...

அதன்படி தங்களது உயிரை பொருட்படுத்தாமல் பள்ளத்தாக்கில் கீழே இறங்கினர். பின்னர் சுமார் 100 அடி பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில் பிரதாப் சிக்கி இருந்தார். இதனைக்கண்ட மாணவர்கள், அவரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். திக், திக் பயத்துடன் அடுத்த சில நிமிடங்களிலேயே மீட்பு பணி முடிந்து விட்டது. தவறி விழுந்ததால் பிரதாப்பின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. இதனால் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

சிகிச்சை

அதன்படி 'டால்பின் நோஸ்' பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக பிரதாப்பை சக மாணவர்கள் தூக்கி கொண்டு வட்டக்கானலுக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே தயாராக நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சு வாகனம் மூலம் பிரதாப் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story