வெடிமருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு


வெடிமருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு
x

வெடி மருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வதற்காக சென்னை துறைமுகத்துக்கு 19 கன்டெய்னர் லாரிகளில் வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டன. இந்த லாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் திருவொற்றியூர் விரைவு சாலை வழியாக வந்து கொண்டிருந்தன.

எண்ணூர் விரைவு சாலை டோல்கேட் அருகே சென்றபோது திடீரென்று அதில் ஒரு லாரி மட்டும் பழுதாகி நடுரோட்டில் நின்றது. அதற்கு பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களிடம் விசாரணை செய்தபோது கன்டெய்னரில் வெடி மருந்து பாரம் இருப்பது தெரிந்தது. அதன்பிறகு சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவர்களிடம் இருந்த ஆவணங்களை வாங்கி பார்த்தனர். அவை சரியாக இருந்தது.

ஆனால் கன்டெய்னர் முறைப்படி 'சீல்' இல்லாமல் இருந்ததால் சென்னை துறைமுகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து போலீசார் பழுது ஏற்பட்ட லாரியை சரி செய்ய மெக்கானிக்கை வரவழைத்தனர். பழுது சரி செய்யப்பட்ட பிறகு வெடி மருந்து பாரத்துடன் இருந்த கன்டெய்னர் லாரியை மணலியில் உள்ள பால்மர் லாரி கன்டெய்னர் முனையத்துக்கு ராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு செல்வதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே வெடி மருந்துடன் நடுரோட்டில் லாரி நின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழுமோ? என்று பொது மக்கள் அச்சப்பட்டனர். பின்னர் ராணுவ பாதுகாப்புடன் அந்த லாரி செல்வதாக அறிந்த பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story