கோவையில் வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சி


கோவையில் வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சி
x

கோவையில் நடைபெற்ற வேலுநாச்சியாரின் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.

கோவை:

வீரமங்கை வேலுநாச்சியார் மருதுசகோதரர்கள் ஆதரவுடன், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஒரு படையை உருவாக்கினார். அவரது தலைமையில் இந்த படை 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டனர்.

இறுதியாக வேலு நாச்சியார் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் கடந்த 1976-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி இயற்கை எய்தினார்.

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை மூலமாக கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நாடக நிகழ்ச்சியில் 62 கலைஞர்கள் தோன்ற 18-ம் நூற்றாண்டை கண்முன்னே கொண்டு வரும் காவிய கதைகள் குறித்தும், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பொற்காலத் தோற்றம் குறித்தும், தமிழ் மண்ணின் வீர சரித்திரம் குறித்தும், அன்னியர்களால் மறைக்கப்பட்டு பல்லாண்டு கால உழைப்பின் பயனாக மீண்டெழுந்திருக்கும் தாய்த் தமிழ் மண்ணின் வெற்றிச் சரித்திரம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வரும் 30-ந் தேதி சிவகங்கையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story