வண்ணாரப்பேட்டையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்


வண்ணாரப்பேட்டையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்
x

வண்ணாரப்பேட்டையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை

சென்னை வண்ணாரப்பேட்டை ராமானுஜ ஐயர் தெருவில் துரித உணவகம் நடத்தி வருபவர் ராஜேந்திரன். இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு மாஸ்டர் வேல்முருகன் (வயது 32) மற்றும் ஊழியர் கார்த்திக் (26) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். ஊழியர் கார்த்திக், சாப்பிடதற்கு பணம் தரும்படி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் கார்த்திக்கிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்னர் தனது நண்பர்களுக்கும் போன் செய்தனர். இதையடுத்து அங்கு 3 மோட்டார் சைக்கிளில் மேலும் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கடையில் இருந்த மற்ற ஊழியர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். ஓட்டலில் இருந்த மேஜை, நாற்காலி மற்றும் உணவு பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த காட்சிகள் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன், கார்த்திக் இருவரும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் (24) மற்றும் அஜித் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் சிலரை ேதடி வருகின்றனர்.


Next Story