திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு


திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
x
தினத்தந்தி 6 Nov 2023 4:44 AM GMT (Updated: 6 Nov 2023 6:11 AM GMT)

நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மேலகொண்டையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு ஆட்டோ டிரைவர் முருகனை கொலை செய்த வழக்கு இருக்கிறது. இந்த வழக்கை ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரவுடி மணிகண்டனின் தாயார் வீடு திருவானைகாவல் பகுதியில் இருக்கிறது. நேற்று இரவு 9 மணி அளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் ரவுடி மணிகண்டனின் தாயார் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்தனர். இதில் அங்கு இருந்த பொருட்கள் சிதறின. அதே நேரத்தில் வீட்டிற்குள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story